‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த விஷாலின் இரண்டாவது படம் ‘சண்டை கோழி’. மீராஜாஸ்மின் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியே தயாரித்திருந்தார்.
இப்போது லிங்குசாமி ‘ரஜினிமுருகன்’ படத்தை ரிலீஸ் செய்து பல பிரச்சினைகளில் இருந்து ரிலாக்ஸாகியிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு ‘ரஜினி முருகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே ‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இதனை ஏற்று விஷாலும் லிங்குவுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். இப்போது விஷால் ‘மருது’ படத்தில் நடித்து வருவதால் அது முடிந்தவுடன் நேரடியாக ‘சண்டை கோழி’க்கு வருவதாகவும் சொல்லியிருந்தார்.
இந்த நேரத்தில் இன்றைக்கு பிரபல சாமியாரான ரவிசங்கரை பெங்களூரில் தனது தந்தையுடன் சென்று சந்தித்து ஆசி வாங்கிய விஷால், அங்கிருந்தே டிவீட்டரில் போட்ட ஒரு செய்தி ‘சண்டை கோழி’ செய்தியை ஒரு கனவாக்கிவிட்டது.
விஷால் தன் ட்வீட்டில் “சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணியின் மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எனவே சண்டைக்கோழி படம் கைவிடப்படுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஷால் இந்தச் செய்தியில் கண்டித்திருப்பது இயக்குநர் லிங்குசாமியைத்தான் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. ஏற்கெனவே பல பணச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் லிங்குசாமிக்கு இந்தப் படத்தையும் தானே தன் பேனரிலேயே தயாரிக்க வேண்டும் என்று நிரம்ப ஆசை.
இதற்கேற்றாற்போல் பைனான்ஸ், கடன் என்று விஷாலின் பெயரை முன் வைத்து லிங்குசாமி எடுத்த அனைத்துவித முயற்சிகளையும் விஷால் விரும்பவில்லையாம். ஏற்கெனவே ஜெமினி லேப் தயாரிப்பில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ இன்னமும் ரீலீஸாக முடியாமல் தவியாய் தவிக்கிறது.
இந்த நேரத்தில் லிங்குவின் தொடர்ச்சியான இந்த கடன் வாங்கும் பிரச்சினையால் இந்தப் படமும் தொங்கலில் நின்றால், அது தனக்குத்தானே குழி வெட்டிக் கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்துதான் விஷால் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தகவல். இயக்குநர் லிங்குசாமி இதற்கென்ன கவுண்ட்டர் அட்டாக் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை..
No comments:
Post a Comment