இதய நோய் உள்ளவர்கள் சில அறிகுறிகள் மூலம் அதை புரிந்து கொள்ள முடியும். மூச்சுத் திணறல், தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி, நடக்கும்போது, ஓடும்போது, உயரமான பகுதிகளில் ஏறும்போது மார்பு வலி ஏற்படுதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். ஒருவருக்கு தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் படபடப்புடன் மார்பு வலி ஏற்பட்டால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வது அவசியம். இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் கொழுப்புச் சத்துக்கள் அதிகமாகி ரத்த ஓட்டத்தை தடுப்பதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது. பொதுவாக இதய நோய் உள்ளிட்ட, எந்த நோயும் நம்மை தாக்காமல் இருக்க தினமும் அரைமணி நேரம் சீரான உடற்பயிற்சி செய்வது நல்லது.
இதய நோயை தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும். இது தவிர இறைச்சி, எண்ணெய் பலகாரங்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சமச்சீர் சத்துணவு, போதிய உடற்பயிற்சி, தினமும் நல்ல தூக்கம், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருத்தல், வருடத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து, சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் கூடியிருந்தால், அதற்குரிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் தவறாமல் உட்கொள்வது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதேநேரம், எந்த சூழலிலும் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருப்பது அவசியம். ஒரே நேரத்தில் பலவகையான சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. நாம் எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருந்தால்தான் நமக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும். அதேநேரம், சுத்த சைவ உணவு உண்பவர்கள், புகையிலை, மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் இதய நோய் வரலாம். எனவே, மனதை லேசாக வைத்திருக்க வேண்டும். மன உளைச்சல் இதய நோய்க்கு வழிவகுத்துக் கொடுக்கும் என்கிறார்கள். அதே நேரத்தில் இதய வால்வு நோய்கள் வந்தால் அதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே வழி.
No comments:
Post a Comment